http://www.geevanathy.com/2022/10/blog-post_9.html
மத்தியகாலத்தில் திருகோணமலைப் பிராந்தியத்தில் நான்கு வன்னிப் பிரிவுகள் இருந்தன. அவற்றிலொன்று தம்பலகாமப்பற்று. அது வன்னியனாரின் ஆட்சிக்குள் அடங்கியது. வன்னியனார் என்போர் குறுநில மன்னர்களாவர். நிர்வாகமும், நீதி பரிபாலனமும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. படைகளும் அவர்கள் வசமிருந்தன. குடியானவர்கள் காடுவெட்டி அவற்றிலே பிரயோசனங்களை உண்டுபண்ண விரும்பினால் வன்னியனாரின் அனுமதி பெறவேண்டும். அது சம்பிரதாயபூர்வமானது. செய்கை பண்ணுபவர்களுக்கு நிலங்கள் சொந்தமாகிவிடுவது வழமை.

இப்பொழுது நிலைமை முற்றாக மாறிவிட்டது. வன்னியனாரின் ஆட்சி முறையில்லை. அதற்குப் பதிலான ஜனநாயக முறைப்படியான பிராந்திய சுயாட்சியும் இல்லை. குடியானவர்கள் காடுகளை வெட்டி நிலங்களைச் செய்கை பண்ணவும் முடியவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்றதும் ஆட்சியதிகாரங்கள் பெரும்பான்மை இனத்தவர் வசமாகிவிட்டன.