திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை
( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )
இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமான திருகோணமலையில் மேற்குறித்த பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது. திருகோணமலையில் கடலுக்குள் நீண்டு இருக்கும் கோணமாமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே ” குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே ” என்று திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட இக்கோயில் உள்ளது.
நம்மில் பலர் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரத்தினை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசித்திருப்போம். எனினும் புகைப்படங்கள், ஓவியங்கள் துணையுடன் நான் உங்களை இப்போது அழைப்பது 1624 இல் போத்துக்கீசர் அழிப்பதற்குமுன் இருந்த திருக்கோணேஸ்வர ஆலய தரிசனத்திற்காகும்.
இந்தப்பயணம் நம்மைச் சுமார் 400 ஆண்டுகள் முன்னோக்கி அழைத்துச் செல்லும். கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீசா கோயில்களை இடித்து அதில் கிடைத்த கற்களைக் கொண்டு திருமலைக் கோட்டையைக் கட்டினான். எனவே கோணேசர் ஆலயப்பயணத்தில் நாம் கோட்டையை நெருங்கும் போது கோட்டையிலுள்ள ஒவ்வொரு கல்லும் போர்த்துக்கேயர் உடைக்கும் முன்பிருந்த ஆலயங்களின் பிரமாண்டத்தினை நமக்குச் சொல்பவையாக இருக்கின்றன.
624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில் போர்த்துக்கேயப் படைவீரர்கள் கொன்ஸ்ரன்ரயின் டீசா என்பவனுடுடைய தலைமையிற் கோயிலினுட் புகுந்தனர். எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க, வெள்ளி நகைகளையும், விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர்.
அத்தோடு போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து மூன்று கோயில்களை முற்றாக அழித்தனர். அவற்றோடு ஆயிரங்கால் மண்டபமும் , பெரியதொரு தீர்த்தக்கேணியும், பிறமண்டபங்களும் அழிந்தன. இவற்றோடு தங்கநிற மையினால் பூசப்பட்ட 7 அடுக்குகளை உடைய தங்கரதம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இந்நிகழ்வுகளை அவர்கள் வரலாற்றுச் சான்றாக எழுதி வைத்த குறிப்புகளிலும், வரைந்து வைத்த படங்களிலும் இருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
பண்டைய பிரமாண்டமான கோவிலின் சரித்திர ஆதாரங்கள் எல்லாம் கோட்டை மதில் சுவருக்குள் இன்றும் ஆராயப்படாமல் மறைந்திருக்கிறது. காலணித்துவ ஆட்சிக்காலம் முதல் இக்கோட்டை இராணுவமையமாகச் செயற்பட்டு வருவதனால் சுதந்திரமான வரலாற்றுத்துறை ஆராட்சிக்கு உட்படாமல் இருக்கிறது.
இப்போது நாம் திருமலைக்கோட்டை வாயிலில் நிற்கிறோம். இங்கு கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்டிருக்கும் ஒரு தூணில் இரட்டை மீன் (இணைக்கயல்கள்) இலட்சினை காணப்படுகிறது. இது சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய ஆட்சிக்காலத்தில் (கி.பி 1251 -1271)அவனது துணை அரசனாக விழங்கிய வீரபாண்டிய மன்னனின் வெற்றிச் சின்னமாகும்.
மேற்படி இரட்டைக்கயல் சின்னத்தின் கீழ் தடித்த வெண்மை பூசப்பட்ட இடத்தில் முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை ... என்று தொடங்கும் குளக்கோட்டன் தொடர்புடைய தீர்க்கதரிசனக் கல்வட்டு காணப்படுகிறது.
400 ஆண்டுகளுக்கு முந்திய நமது திருக்கோணேஸ்வர ஆலய தரிசன முயற்சியில் இந்தக்கோட்டையில் உள்ள கற்களெல்லாம் கோவில்களாக இருந்திருக்கும் என்றெண்ணியபடி கோட்டை வாயிலைத் தாண்டிச் செல்வோம்.
இப்போது நீங்கள் ஒரு சிறிய குன்றினில் ஏறுவது போன்று உணர்வீர்கள். சிறிது நேரத்தின் பின் நாம் ஒரு சமதரைப்பகுதியை அடைவோம். இங்குதான் திருவிழாக் காலங்களில் மாத்திரம் திறக்கப்படும் பாவநாச தீர்த்தம் இருக்கிறது.
பாவநாச தீர்த்தம் இருக்கும் இடத்தின் வீதியின் மறுபக்கம் முன்னர் கச்சேரியும் , அரச பணிமனைகள் இருந்த சமதரைப்பகுதி பின்னர் மோட்டார் போக்குவரத்து பணிமனையாக இருந்தது. இவையனைத்தும் தற்போது இடம்மாறிச் சென்றுவிட வீதியின் இருபக்கமும் இலங்கை இராணுவ பணிமனைகள் இருக்கிறன.
இப்போது இந்த இடத்தில் நின்றுகொண்டு பாவநாச தீர்த்தக் கிணறு இருக்கும் இடத்தில் போர்த்துக்கேயரால் தூர்க்கப்பட்ட பாவநாச தீர்த்தத்தையும், வீதியின் மறுபக்கம் கட்டிடங்களால் நிறைந்திருக்கும் பெரிய சமதரைப்பிரதேசத்தில் பிரமாண்டமான கோபுரத்தை உடைய ஒரு கோவிலையும் உங்கள் மனக்கண்முன் கொண்டுவாருங்கள். அதுதான் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரம் 1624 இல் போத்துக்கீசர் அழிப்பதற்குமுன் கொண்டிருந்த மூன்று கோவில்களில் ஒன்றான மாதுமை அம்பாள் ஆலயமாகும்.
மாதுமை அம்பாள் ஆலயம்
தெட்சணகயிலாய புராணத்தின் திருநகரச் சுருக்கம் சொல்லும் இந்த பிரமாண்டமான கோபுரத்தை உடைய மாதுமை அம்பாள் ஆலயம் தேரோடும் வீதியையும் பல மண்டபங்களையும், மடங்களையும் கொண்டிருந்தது. அத்துடன் பாவநாச தீர்த்தத்தைச் சூழ அடியார்களின் உபயோகத்திற்காக ஐந்து கிணறுகளையும் கொண்டிருந்தது. மலை உச்சியில் இருந்த கோணேசப்பெருமான் மாதுமை அம்பாள் ஆலயத்திற்கு எழுந்தருளிய பின்னர் இங்கிருந்துதான் திருகோணமலை நகருக்கான கோணேசர் நகர்வலம் ( இரதோற்சவம் ) ஆரம்பிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் அந்த மடங்கள் வெளிநாட்டு பக்த அடியார்களாலும், அவர்கள் இசைக்கும் பக்தி கானங்களாலும் நிறைந்திருக்கும். இப்பொழுது மாதுமை அம்பாள் ஆலயம்,பாவநாச தீர்த்தம் என்பன இருந்த இடத்தில் இருந்து தொடர்ந்து பயணிப்போம்.
இப்போது நாம் இன்னுமொரு சிறு குன்றின்மேல் பயணிப்போம். படத்தில் உள்ளதுபோல் மிகச்சிறியதாக அந்த ஏற்றம் ஏறிப்பின் கொஞ்சம் செங்குத்தாக ஏறி ஒரு சமதரையில் முடியும். இப்போது அந்த இடத்தில் இராணுவக்குடியிருப்பும், இரண்டாம் உலகமகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கியும், பிரித்தானியரால் அமைக்கப்பட்ட நிலத்தடி நீர்த்தொட்டியும் இருக்கிறது.
1944ம் ஆண்டு மேற்படி நீர்த்தொட்டி அமைக்க அகழ்வு வேலைகள் செய்த பொழுது விஷ்ணு, மகாலட்ஷ்மி ( பூமாதேவி ) விக்கிரகங்கள் கிடைத்தன. அவை இன்றும் தியான மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன.
இங்குதான் திருக்கோணேஸ்வரத்தில் குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் செய்த காலத்தில் கட்டிய ஸ்ரீ நாராயணமூர்த்தியின் கற்கோவில் அமைந்திருந்தது. உயர்ந்த கோபுரத்தை உடைய இக்கோயிலின் கருவறையில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் கிருஷ்ண கீதம் நிறைந்த இடமாக அமைந்திருக்கும்.
தொடர்ந்தும் நம்பயணம் மலை உச்சியில் இருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை நோக்கி நகர்கிறது.
போர்த்துக்கேயத் தளபதி கொன்ஸ்ரன்ரயின் டீசா திருக்கோணேஸ்வர ஆலயத்தை அழிப்பதற்கு முன்னால் கோவிலை வரைந்து லிஸ்பொனிலுள்ள போர்த்துக்கீச மன்னனுக்கு கடிதம் அனுப்பினான். அவன் வரைந்த படம்.
தனது படத்துடன் அக்கோவில் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம்இஅகலம் 80 பாகம் எனவும் மன்னனுக்கான மேற்படி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1890ஆம் ஆண்டு மத்திய மாகாண அரச அதிபராக இருந்த ஹென்றி.டபிள்யு.கேவ் என்பர் இலங்கை என்னும் தான் எழுதிய சரித்திர நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
போர்த்துக்கீசர் இக்கோவிலை இடித்தழித்த பின்னர் இப்பொழுது அந்த இடம் வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது.இதனைப் பார்த்தால் யாரும் வருத்தப்படாமல் இருக்க முடியாது. எனினும் இந்துக்கள் அந்த வெற்றிடத்தை சிவழிபாட்டுத் தலமாக வழிபட்டு வருகிறார்கள். தெய்வ நிந்தனைக்குரியதும்இ வருத்தம் தரக்கூடியதுமான செயலை போர்த்துக்கீசர் செய்தபோதிலும் இன்னமும் அந்த இடம் புனிதமும்இமேன்மையும் கொண்ட வழிபாட்டிடமாக இருந்துவருகிறது. எனக் குறிப்பிடுகிறார்.
மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகளை உள்ளவாங்கியபடி நாம் இப்போது மலையுச்சியில் இருக்கும் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு வந்து விட்டோம். 400 வருடங்களுக்கு முந்தைய திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம் ஓவியமாக.
திருகோணமலை பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் நூலில் அவரது வரலாற்று ஆதாரங்களுக்கு அமைய ஓவியப்படுத்தி இருப்பவர் திருமதி.சௌந்தரலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள்.
போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட திருக்கோணேஸ்வரத்தின் சின்னங்களில் ஒன்றான 3அடி நீளமான நந்திதேவர் இவ்வாலய சிறப்பினை போர்த்துக்கீச சரித்திர நூலாசிரியர் டீ.குவைறோஸ் அடிகளார் இவ்வாறு சொல்கிறார்.
திருகோணமலைத் துறைமுகத்தின் தரைப்பகுதியில் இருந்து கடலுக்குள் நீண்டிருக்கும் மலையில் மூன்று கோவில்கள் உள்ளது.அவற்றில் கடலுக்குள் நீண்டிருக்கும் 400 அடி உயரமான மலையில் இருக்கும் கோணேசர் ஆலயமே மிகப்பிரபல்யமான ஆலயமாகும்.கீழைத்தேசத்தவரின் ரோமாபுரியாக இக் கோணேசர் கோவில் விளங்குகின்றது. இராமேஸ்வரத்திற்கும் இபூரிஜெந்நாத் ஆலயத்திற்கும் வரும் யாத்திரிகர்களைக் காட்டிலும் அதிகமான பக்கதர்கள் இவ்வாலயத்தைத் தரிசிக்க வருகிறார்கள்.
மேற்படி விபரிப்புக்களும் இ புகைப்படங்களும்இ ஓவியங்களும் உங்கள் மனத்திரையில் கிழ் உள்ள ஓவியத்தை உருவாக்கி இருந்தால் அதுதான் நீங்கள் தரிசித்த 400 வருடங்களுக்கு முன்னரான திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம்.
திருகோணமலை பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் நூலில் அவரது வரலாற்று ஆதாரங்களுக்கு அமைய ஓவியப்படுத்தி இருப்பவர் திருமதி.சௌந்தரலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள்